Loading Bible Translation
First-time download in progress. This may take a few seconds…
Tamil Holy Bible Wordproject Bible
34 verses
1ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,
2அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ!
3விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்னசெய்வீர்கள்? உதவிபெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்து விடுவீர்கள்?
4கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
5என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.
6அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக்கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.
7அவனோ அப்படி எண்ணுகிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் ஜாதிகளை அழிக்கவும் சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.
8அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?
9கல்னோ பட்டணம் கர்கேமிசைப்போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போலானதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?
10எருசலேமையும் சமாரியாவையும் பார்க்கிலும் விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க,
11நான் சமா���ியாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்லுகிறான்.
12ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.
13அவன்: என் கையின் பெலத்தினாலும், என் ஞானத்தினாலும் இதைச்செய்தேன்; நான் புத்திமான், நான் ஜனங்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் பண்டகசாலைகளைக் கொள்ளையிட்டு வல்லவனைப்போல் குடிகளைத் தாழ்த்தினேன்.
14ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் செட்டையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்லுகிறான்.
15கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மை பாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே.
16ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச்சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப்போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.
17இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினிஜுவாலையுமாகி ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும் நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து,
18அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும் புறம்புமாய் அழியப்பண்ணுவார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.
19காட்டில் அவனுக்கு மீதியான மரங்கள் கொஞ்சமாயிருக்கும், ஒரு சிறுபிள்ளை அவைகளை எண்ணி எழுதலாம்.
20அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.
21மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள்.
22இஸ்ரவேலே, உன் ஜனங்கள் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டுவரும்.
23சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்துக்குள்ளெங்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார்.
24ஆகையால் சீயோனில் வாசமாயிருக்கிற என் ஜனமே, அசீரியனுக்கு பயப்படாதே; அவன் உன்னைக்கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.
25ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்துக்குள்ளே என் உக்கிரமும், அவர்களைச் சங்கரிக்கப்போகிறதினால் என் கோபமும் தீர்ந்துபோம் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
26ஓரேப் கன்மலையண்டையிலே மீதியானியர் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன் மேல் ஒரு சவுக்கை எழும்பிவரப்பண்ணி, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.
27அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் துக்கமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோம்.
28அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.
29கனவாயைத் தாண்டி, கேபாவிலே பாளயமிறங்குகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது.
30காலிம் குமாரத்தியே, உரத்தசத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆன தோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்டசத்தமிட்டுக் கூப்பிடு.
31மத்மேனா வலசைவாங்கிப்போம், கேபிமின் குடிகள் தப்பிஓடக் கூட்டங்கூடுகிறார்கள்.
32இனி ஒருநாள் நோபிலே தங்கி, சீயோன் குமாரத்தியின் பர்வதத்துக்கும், எருசலேமின் மேட்டுக்கும் விரோதமாய்க் கைநீட்டி மிரட்டுவான்.
33இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாய் வெட்டுவார்; ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.
34அவர் காட்டின் அடர்த்தியைக் கோடரியினால் வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும்.